மும்பை சிறையில் இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மும்பைக்கு அழைத்து சென்று கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ போலீஸார் விசாரிக்க உள்ளனர்.
மும்பை : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கூடுதல் தகவல்களை பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு அழைத்து வந்து அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி முன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்த வந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்தது.
அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது. எனினும் 5 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து வந்தனர். இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படடுகிறது.
மேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ விசாரிக்கிறது. கார்த்தியின் சிபிஐ காவல் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.