ஷீனா போரா கொலை வழக்கை டேக் ஓவர் செய்த சிபிஐ: விசாரிக்கும் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை மும்பை போலீசாரிடம் இருந்து சிபிஐ தன் வசமாக்கியுள்ளது. வழக்கை இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார். இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரணை செய்து வந்தனர். வழக்கை விசாரித்து வந்த மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு திடீர் என பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஷீனா வழக்கை சிபிஐக்கு மாற்ற மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து சிபிஐ செவ்வாய்க்கிழமை ஷீனா வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சிபிஐ அதிகாரிகள் இந்திராணி முகர்ஜி, சஞ்சீவ் கன்னா மற்றும் ராய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்திராணி ஷீனாவுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை போலீஸ் விசாரணையில் விஷம் விஷயம் வெளியே வரவில்லை.
ஷீனா வழக்கை ராஜஸ்தானைச் சேர்ந்த லதா மனோஜ் குமார், நினா சிங் ஆகிய பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.