நிலக்கரி முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்பப்படுமா?
டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில் அளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மன்மோகன் சிங்கிடம் விசாரிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மது கோடா டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு பதில் அளித்த சி.பி.ஐ, நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 பேரும், மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்புவதை விரும்புகிறார்களா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.
மது கோடாவின் இந்த மனு ஏற்கப்பட்டால் 15 குற்றவாளிகளுடன் மன்மோகன் சிங் உள்ளிட்ட 3 பேரையும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா கோரினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.