ஹெலிகாப்டர் ஊழல்.. ஆளுநர்கள் எம்.கே. நாராயணன், வான்சூவும் சிக்கினர்!
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது.
இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவராக இருந்த வான்சூ ஆகியோர் அனுமதி கொடுத்ததாக கூறப்பட்டது.
தற்போது இந்த இருவரும் மேற்குவங்கம் மற்றும் கோவா மாநில ஆளுநர்களாக இருக்கின்றனர். இவர்களையும் சிபிஐ இந்த வழக்கில் சேர்க்க முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது. தொடக்கத்தில் இதற்கு அனுமதி மறுத்த சட்ட அமைக்கம் தற்போது எதற்காக இந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதனால் இந்த இருவரும் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.