குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை.. சுப்ரீம்கோர்ட் அதிரடி
Recommended Video
டெல்லி: குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைசெய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுவந்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த மே 14-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாமா என்பது குறித்து இன்று தீர்ப்பளித்தது. அதன்படி குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்துதமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.