நீட் தேர்வுக்கு ரெடியாகும் மாணவர்களே... முதலில் வெளிர் நிற ஆடை இருக்கான்னு செக் பண்ணுங்க!
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
டெல்லி : மே மாதம் நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளை மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வழக்கமான ஆடையில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத வந்த மாணவர்களிடம் ஆடைக்கட்டுப்பாடு என்ற பெயரில் அட்ராசிட்டி செய்தார்கள்.
முழுக்கை சட்டை போட்டிருந்த மாணவர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டு அறைக்கை சட்டைகளாக மாற்றப்பட்டன. பெண்கள் கழுத்து கைகளில் இருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சிபஎஸ்இயின் இந்த கெடுபிடி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சிபிஎஸ்இ ஆடைக்கட்டுப்பாடுகள் வெளியீடு
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத உள்ளவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகளை சிபிஎஸ், முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் வெளிர் நிற அறைக்கை சட்டை அணிய வேண்டும், ஷூக்களை அணியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹைஹீல்ஸ் கூடாது
பெரிய பொத்தான், பேட்ஜ் அல்லது பூ போட்டை சட்டையை அணியக் கூடாது. பெண்கள் சல்வார் அணிந்து வர வேண்டும், ஷூக்களை அணியக்கூடாது, காலணி மற்றும் சேன்டல்கள் குறைவான ஹீல்கள் பொருத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள் கூடாது
தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கொண்டுவரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு வந்தால் அவை அனுமதிக்கப்பட மாட்டாது என்பதோடு இதனை பாதுகாக்க தேர்வு மையங்களில் தனி வசதிகள் எதுவும் செய்து தரப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வித்தாளில் பிரச்னை வராமல் இருந்தால் சரி
ஆடைக்கட்டுப்பாடுகள் விதிப்பதெல்லாம் சரி தான் ஆனால் வினாத்தாள் பிரச்னையில் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்கள் இந்த ஆண்டு சரிசெய்யப்படுமா என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது. கடந்த ஆண்டு குஜராத் தேர்தலை மனதில் வைத்து அந்த மாணவர்களுக்கு எளிதாக கேள்விகளை கேட்டது போல இந்த ஆண்டு கர்நாடக மாணவர்களுக்கு லக்கி அடித்தது போல ஆகாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயார் செய்தார் சரிதான் என்கிறது சிலரின் மைண்ட் வாய்ஸ்.