சிபிஎஸ்இ கணித தேர்வு குளறுபடி.. விசாரணைக்கு ஏற்ற விவகாரம் என்கிறார் வெங்கய்யா நாயுடு
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணித தேர்வு மிகவும், கடினமாக இருந்ததாகவும், கேள்வித்தாள் லீக் செய்யப்பட்டதாகவும் வெளியான தகவல்கள் விசாரணைக்கு ஏற்றவை என்று, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி கவனத்திற்கு இதை கொண்டு செல்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
கடந்த 14ம் தேதி சிபிஎஸ்சி 12ம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கேள்விகள் மிக கடினமாக இருந்ததாகவும், அதிகப்படியாக எழுத வேண்டி வந்ததாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். பல மாணவர்கள் கண்ணீர் வடித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் மற்றும் மத்திய சென்னை அதிமுக எம்.பி எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் லோக்சபாவில் குரல் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், இந்த விவகாரத்தில் இரு விஷயங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. கேள்வித்தாள் கடினமாக இருந்தது ஒரு புகார் எனில், கேள்வித்தாள் வாட்ஸ்அப் மூலமாக லீக் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விரு விவகாரங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. இதுகுறித்து ஸ்மிருதி இரானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
சிபிஎஸ்இ வாரியத்தின்கீழ் நாடு முழுக்க 20 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இதுவரை புகார் பற்றி வாரியம் எந்த பதிலையும் வெளியிடாமல் உள்ளது. கடந்த ஆண்டு இதேபோல பிரச்சினை வந்தபோது, விடை தாள் திருத்தத்தில் கெடுபிடி காட்டாமல் ஆசிரியர்கள் மதிப்பெண்களை வாரி வழங்கினர்.
இம்முறையும், அதேபோன்ற நிலைப்பாடு எடுக்கப்படும் என்று தெரிகிறது.