அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 'டிரெஸ் கோட்': இஸ்லாமிய மாணவிகளுக்கு சிக்கல்
டெல்லி: அகில இந்திய மருத்துவக் கல்விக்கான மறுநுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் முறையாக 'டிரெஸ் கோட்' அறிவுறுத்தலை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விடுத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது இஸ்லாமிய மாணவியரை நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து ஒதுக்கும் முயற்சி எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 3ந்தேதி 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து மறு தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வரும் 25-ந் தேதி மறு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான கடந்த 9-ந் தேதியன்று சுற்றறிக்கை ஒன்றை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டது.
அதில், மாணவ மாணவியர் தலையில் 'ஸ்கார்ப்' அணியக் கூடாது; ஸ்லீவ்லெஸ் உடைகளை அணியக் கூடாது; ஷூக்களுக்கு பதிலாக செருப்புகளே அணிய வேண்டும் என்று முதல் முறையாக ஏராளமான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவே இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கூறினாலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுவாக இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து பள்ளிக் கூடங்களுக்கு செல்வது வழக்கம்... தற்போது வேறு ஒரு உடையில் போய் தேர்வு எழுதச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷாவரத்தின் பொதுச்செயலாலர் மசூம், இது அப்பட்டமான மத சுதந்திரத்தை, அடிப்படை உரிமைகளை மீறும் செயல்.. முஸ்லிம் மாணவியரை இந்த நுழைவுத் தேர்வில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சி. இதனால் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றார்.
அத்துடன் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 'இலகுவான உடைகள்' (light clothes) அணியக் கூடாது என கூறியுள்ளது. இது எந்த மாதிரியான உடைகளைக் குறிப்பிடுகிறது எனவும் அதில் விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.