ஹரியானா மாணவி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: எஸ்.பி. இடமாற்றம்
Recommended Video
ரேவரி: ரேவரியில் 19 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி கடந்த 12ம் தேதி கடத்தப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தீன்தயாள், டாக்டர் சஞ்சீவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான நிஷுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நிஷு தான் மாணவியை கடத்தி தீன்தயாளுக்கு சொந்தமான அறையை வாடகைக்கு எடுத்தவர். பலாத்காரத்திற்கு பிறகு மாணவியின் நிலை மோசமானதை அடுத்து வரவழைக்கப்பட்ட டாக்டர் சஞ்சீவ் நடந்த சம்பவம் பற்றி போலீசில் தெரிவிக்காததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ராணுவ வீரர் பங்கஜ் உள்பட 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். மாணவி வழக்கில் உள்ளூர் போலீசார் சரியாக செயல்படாததால் முதல்வர் கட்டார் கோபம் அடைந்தார்.
இதையடுத்து அவர் ரேவரி எஸ்.பி. ராஜேஷ் டுக்கலை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.