சி.பி.எஸ்.இ கணிதத் தேர்வு “டஃப்”- விடைத்தாளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு
டெல்லி: டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் கடினமான கேள்விகளே இடம் பெற்றிருந்தது என்பதால் விடைத்தாள்களை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு கணிதத்தேர்வு கடந்த 14 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் புகார் கூறினர். எனவே இதற்கு மறுதேர்வு நடத்த வேண்டும் அல்லது கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என பெற்றோரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த தேர்வு தொடர்பாக மாணவர்கள், கணித ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வினாத்தாளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்தது.
அதன்படி கணக்கு பாட வல்லுனர்கள், பாடத்திட்ட வல்லுனர்கள், தேர்வு வாரிய பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கணக்கு வினாத்தாளை ஆய்வு செய்து, விடைத்தாளை திருத்துவது மற்றும் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஒரு திட்டத்தை வகுப்பார்கள்.
இந்த திட்டங்கள் அடங்கிய நகல்கள் ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.