இங்கெல்லாமா சிசிடிவி வைப்பாங்க?... அலிகாரில் டாய்லெட்டில் கேமரா வைத்த கல்லூரி
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு கல்லூரியில் ஆண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமராக்களை கல்லூரி நிர்வாகம் பொருத்தியுள்ளது.
அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலிகாரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமராக்களை கல்லூரி நிர்வாகம் பொருத்தியுள்ளது கல்லூரி மாணவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் உள்ள தரம் சமாஜ் பட்டப் படிப்பு கல்லூரி. இங்கு நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்தன.
இந்த முறைகேடுகளால் கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை கல்லூரி நிர்வாகம் விரும்பவில்லை. மேலும் கல்லூரியின் கழிப்பறைக்கு செல்லும் மாணவர்கள் அங்கு பிட் உள்ளிட்ட முறைகேடான பொருட்களை தேர்வு அறைக்கு கொண்டு செல்கின்றனர்.
அபத்தம்
இது தொடர்பாக கல்லூரி முதல்வருக்கு புகார்கள் கிடைத்தன. இதையடுத்து முறைகேட்டை தடுக்க நினைத்த கல்லூரி நிர்வாகம் அபத்தமான வேலையில் ஈடுபட்டுள்ளாது.
கேமரா வைத்துள்ளது
அதாவது கல்லூரியில் ஆண்கள் கழிப்பறைக்குள் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. இதை அறிந்த மாணவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவர் கூறுகையில், கழிப்பறைக்குள் கேமரா வைத்துள்ளதை நியாயப்படுத்த முடியாது.
அவமானம்
அதை உடனடியாக அகற்ற வேண்டும். இது எங்களை அவமானப்படுத்தும் செயலாகும். இதுதொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைக்கு மூத்த வழக்கறிஞர்களை நாடவுள்ளோம். தனி நபர் உரிமையை மீறும் இந்த செயல் தொடர்பாக ஆலோசனை நடத்துவோம் என்றார்.
போராட்டம் நடத்த முடிவு
மற்றொரு மாணவர் கூறுகையில் கல்லூரி நிர்வாகத்தின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதற்காக கேமராக்களை கழிப்பறையில் வைப்பது நியாயப்படுத்த முடியாது என்றார். இதுதொடர்பாக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் வேண்டாம்
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஹேம் பிரகாஷ் குப்தா கூறுகையில் சிசிடிவி கேமராக்களை நிறுவியதை முறைகேடுகளை தவிர்ப்பதற்காகத்தான். தேர்வு நேரத்தின்போது கழிப்பறைக்கு சென்று மாணவர்கள் துண்டு காகிதங்களை எடுத்துக் கொண்டு தேர்வு எழுதுவதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. இதில் தனி மனித உரிமை மீறல் ஒன்றும் இல்லை. மாணவர்கள் போராட்டம் வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.