சந்தோஷத்திலிருந்து சோகத்திற்கு மாறிய பாஜக.. பட்டாசு வெடித்து உற்சாகத்தில் லாலு கட்சியினர்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி முன்னிலையில் உள்ளதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் வீட்டிற்கு முன்பு கட்சியினர் நடனமாடி, இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்.
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.
வாக்குகள் எண்ணத் துவங்கியபோது பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து பாஜகவினர் கட்சி அலுவலகத்திற்கு முன்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் நேரம் செல்ல செல்ல பாஜக பின்தங்கி ஐக்கிய ஜனதாதள கூட்டணி முன்னிலைக்கு வந்துவிட்டது.
இதே நிலை தொடர்ந்தால் ஐக்கிய ஜனதாதள கூட்டணி அமோக வெற்றி பெறுவது நிச்சயம். இந்நிலையில் அந்த கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் பாட்னா வீட்டிற்கு முன்பு கட்சியினர் மேளதாளம் முழங்க நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் கொண்டாட்டத்தில் ஈடுபட பாஜகவினர் தற்போது சோகமாகிவிட்டனர். ஐக்கிய ஜனததாள கூட்டணியில் உள்ள நிதிஷ், லாலு, காங்கிரஸ் தொண்டர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களை துவங்கியுள்ளனர்.