அமர்நாத் பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி… ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை நிறுத்தம்
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து, ஜம்முவில் செல்போன் மற்றும் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து ஜம்முவில் செல்போன் மற்றும் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜம்முவின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.
இதனிடையே, நேற்று இரவு அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதி வழியாக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அதில், 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியாகினர். 3 போலீசார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
தாக்குதலை தொடர்ந்து அனந்தநாத் மாவட்டத்தில் இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் அனந்தநாத் மாவட்டம் முழுக்க குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்முவில் செல்போன் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் சேவை மட்டும் குறைந்த அளவிலான வேகத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.