பணமதிப்பு ரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்க பட்ஜெட் தொடரில் முக்கிய அறிவிப்புகள்?
நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. பணமதிப்பு ரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் இருக்கும்
டெல்லி: பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. குறிப்பாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றவுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 4வது முறையாக பட்ஜட் தாக்கல் செய்யவுள்ளார். இதுவரை தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் இந்த ஆண்டு முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் சேர்த்தே தாக்கல் செய்யப்படவுள்ளது.
பாதிப்பை சரிகட்ட புதிய அறிவிப்பு?
பிரதமர் மோடியில் பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் பல்வேறு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதனை சரிகட்டும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வு?
விவசாயம் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான புதியதிட்டங்கள், சிறுகுறு தொழில்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
விலைவாசி உயர்வால் தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதன்காரணமாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு ஆதரவாக அறிவிப்புகள்
ஏற்கனவே பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆறுதலாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதரவாக சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் - தாராள சலுகைகள்
வீட்டுக்கடன், தொழிற்கடன் உள்ளிட்டவற்றிற்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டும் மத்திய அரசு கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள், பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள் போன்றவற்றிற்கு தாராள சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.