மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது... தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்க வாய்ப்பு
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூடும் நிலையில் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உளளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த 15 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாராமுகத்துடன் இருக்கும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளுக்கு நாள் நூதன முறையில் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். நேற்று எலி கறி உண்டு போராட்டம் நடத்திய அவர்கள் இன்று காந்தியடிகளின் படத்தை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்பினரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மொழி தெரியவில்லை எனில் போராடும் விவசாயிகளின் வலியை உணர்வதாக கூறி உத்திரபிரதேசம், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
நாடெங்கும் பாஜக அரசுக்கு கண்டனக் கணைகள் தொடர்ந்து வருகிறது. இ்ந்த நிலையில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை டெல்லியில் கூடுகிறது. அச்சமயம் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வாய்ப்பிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.