பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.. கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி முதுமையால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் துக்கம் அறிவித்தது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அமைச்சரவைக் கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.