காவிரி மேலாண்மை வாரியம்: பிடிவாத கர்நாடகா மீது சுப்ரீம் கோர்ட்டில் புகார்… மத்திய அரசு முடிவு!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உறுப்பினர் பெயரை அளிக்காத கர்நாடக மாநில அரசின் மீது மத்திய அரசு இன்று புகார் செய்ய உள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அக். 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட வேண்டும் என்றும் 1ம் தேதிக்குள் உறுப்பினர் பெயர்களை அனுப்பி விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதுதவிர 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை தினமும் 6000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடவில்லை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அதற்கான உறுப்பினர் பெயரையும் இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதுவும் கர்நாடகத்திற்கு அவசியமில்லை என்றாகிவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் மேலாண்மை வாரியத்திற்கான உறுப்பினர் பெயர்களை தெரிவித்துவிட்ட நிலையில், கர்நாடக அரசு மட்டும் இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு இன்னும் உறுப்பினர் பெயரை தெரிவிக்க வில்லை என்ற புகாரை அளிக்க உள்ளார்.