தமிழகத்துக்கு நல்ல செய்தி.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கியது: நீர்வளத்துறை செயலாளர்
டெல்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், இது தொடர்பாக வழக்கை செப். 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி பிரச்சனைத் தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கர்நாடகத்தின் சார்பில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
என்றாலும், காவிரி பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி 4 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டது" என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பத்தில் கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இனி என்ன செய்யப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். உமா பாரதியின் கர்நாடக ஆதரவையும் மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்திருப்து குறிப்பிடத்தக்கது.