போருக்கு தயார்... ரூ. 40,000 கோடி மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
சீனாவுடன் யுத்தம் நடைபெறலாம் என்பதால் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்துகொள்ள ராணுவத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: போருக்கு தேவையான அதி முக்கிய நவீன ஆயுதங்களை ரூ .40 ஆயிரம் கோடிக்கு ராணுவம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவுடன் எல்லையில் மோதல் வலுத்து வரும் நிலையில், ராணுவ வீரர்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கும்படி உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராணுவத்தின் சில பிரிவுகளில் உள்ள வெற்றிடத்தை நிரப்பி பாதுகாப்பை பலப்படுத்தும் வழக்கமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
போர் தவிர்க்க முடியாததாகி விடும்போது எந்த வித பின்னடைவும் ஏற்படக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் .
30 நாட்களுக்கு போர் நீடித்தால், அதற்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கு நிதியை தாராளமாக செலவிடவும், துணை ராணுவத் தலைமைத் தளபதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச சந்தையில் இருந்து பத்து வகையான அதிநவீன ஆயுதங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த உத்தரவால் தேவையான ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை ராணுவத் தலைமை பெற வேண்டிய அவசியம் நேராது. இந்த ஆயுதங்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.