ஜெ. மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி லோக்சபாவில் ஓபிஎஸ் எம்.பிக்கள் அமளி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி , லோக்சபா கூடியதும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடல்நிலைக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னை அப்பல்லோவில் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதன் பின்னர் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.
ஓபிஎஸ் அணி போராட்டம்
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் அறவழிப் போராட்டம் நடத்தினர். இதனால் சசிகலா அணியினர் விழிபிதுங்கி நின்றனர்.
ராஜ்யசபாவில்
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜ்யசபாவில் ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர்.
நாடாளுமன்றத்துக்கு விடுமுறை
நாடாளுமன்றத்துக்கு சனி, ஞாயிற்று, திங்கள் அன்று ஹோலி பண்டிகை என்பதால் 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை லோக்சபா கூடியது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி.சுந்தரம் எழுப்பினார்.
சசிகலா அணியினர் எதிர்ப்பு
அப்போது சசிகலா அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அமைச்சர் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்தகுமார் தெரிவிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசால் தற்போது தலையிட முடியாது என்று விளக்கம் அளித்தார்.
சபாநாயகர் மறுப்பு
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம்நிலவியது.