மக்களுக்கு அடுத்த சோதனை.. டிரைவிங் லைசென்ஸை ஆதாருடன் இணைக்க அரசு திட்டம்!
டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் இணைக்கப்படும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
பக்வாரா: கூடிய சீக்கிரம் ஆதார் எண்ணுடன் டிரைவிங் லைசென்சை இணைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர போகிறது.
106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தான் இந்த தகவலை கூறியுள்ளார்.
அப்போது அவர் மேலும் சொன்னதாவது:ஆதாரை கொண்டு வந்ததால்தான் மக்களுக்கு நிறைய பயன்கள் கிடைத்துள்ளன. இதுவரை 127 கோடி ஆதார் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய சட்டம்
அதேபோல, ஆதார் எண்ணுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைப்பதற்காக புதிய சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. அது இப்போது நிலுவையில் இருக்கிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர காரணம் என்னவென்றால், நிறைய பேர் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பி விடுகிறார்கள்.
தப்பி விடுகிறார்கள்
அது மட்டும் இல்லை, உடனே வேறு ஒரு லைசென்சையும் வாங்கி வைத்து கொள்கிறார்கள். இதனால் ரொம்ப ஈசியாக தண்டனையில் இருந்து அவர்கள் தப்பி விடுகிறார்கள். இதெல்லாம் இனிமேல் இருக்க கூடாது என்பதால்தான், ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் சேர்த்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கைரேகை, கருவிழி
என்னதான், புது டிரைவிங் லைசென்ஸ் எடுத்தும், பெயரை மாற்றி கொண்டும் தப்பித்தாலும், ஆதாரில் உள்ள கைரேகை, கருவிழி இதிலிருந்தெல்லாம் தப்ப முடியுமா என்ன? இதனால் குற்றவாளிகள் தப்பவே முடியாது.
எச்சரிக்கும்
மாற்று ஓட்டுநர் உரிமம் பெற அவர் விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கெனவே ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார். அவருக்கு புதிய உரிமம் தரக்கூடாது என்பதை ஆதார் கார்டை பதிவு செய்துள்ள கம்ப்யூட்டர் எச்சரிக்கும்" என்றார்.