பாஜக ஆட்சியில் விமான கட்டணத்தை விட ஆட்டோ கட்டணம் குறைவாம்... சொல்வது மத்திய அமைச்சர்
பாஜக ஆட்சியில் ரப்பர் செருப்பு போட்டவர்கள் கூட விமான பயணம் செய்ய முடியும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்
இந்தூர்: பாஜக ஆட்சியில் விமான கட்டணம் ஆட்டோ கட்டணத்தை விட குறைவு என்பதால், ரப்பர் செருப்பு போட்டவர்கள் கூட விமான பயணம் செய்ய முடியும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்
விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்தூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில் பல துறைகளில் வளர்ச்சி மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குறிப்பாக விமான போக்குவரத்து துறையில் பல புரட்சி திட்டங்களை இந்த ஆட்சி கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
சாமானியர்களின் எட்டாத கனவாக இருந்த விமான பயணம் தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வரை இந்த ஆட்சி செய்துள்ளது பெரும் சாதனை என தெரிவித்தார். பல ஆயிரங்களாக இருந்த கட்டணத்தை குறைத்து தற்போது ஆட்டோ கட்டணத்தை விட குறைவாக மாற்றி இருப்பது வரலாற்று சாதனை என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய கருத்து முட்டாள் தனமாக இருப்பதாக சில கூறலாம் என்று தெரிவித்த அவர், டெல்லியிலிருந்து இந்தூரிருக்கு விமானத்தில் வருவதற்கு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் வசூலிப்பதாகவும், ஆனால் ஆட்டோவில் 10 முதல் 15 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் தற்போது ரப்பர் செருப்பு போட்டவர்கள் கூட பாஜக ஆட்சியில் விமானத்தில் பறக்க முடியும் என்றும், இந்த வளர்ச்சியை கொண்டு வந்தது மோடி அரசு தான் என்றும் கூறினார்.
இந்த கருத்திற்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், மோடி ஆட்சியில் ரப்பர் செருப்பு மட்டும் தான் மக்களால் வாங்க முடியும் என்றும் விலைவாசி அந்தளவு உச்சத்தில் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.