15-வது நிதி ஆணையத்தின் விதிமுறைகளால் தென்மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும்: பினராயி விஜயன்
மத்திய அரசின் புதிய நிதி ஆணையத்தின் விதிமுறைகளால் தென்மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: 15வது நிதி ஆணையத்தின் விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2020ம் ஆண்டோடு முடிவடைவதை அடுத்து, மத்திய அரசு 15வது நிதி ஆணையக் குழுவை சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அதன்படி, அந்தக் குழு கொடுத்துள்ள பரிந்துரைகள் 2020ல் இருந்து 2025ம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15வது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரைகள், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவாக நிதி கிடைக்கச் செய்யும் வகையில் இருப்பது குறித்து இதன் பாதிப்புகளை ஆராயும் வகையில், தென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
இந்தக் கூட்டத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் பங்குபெற்றனர். தமிழகம் பங்கேற்கவில்லை. இதில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என புதிய மத்திய நிதி கமிஷன் விதிமுறை வகுத்திருப்பது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு பெரிய அளவில் இழப்பைத் தரும் என்று தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி - பணமதிப்பிழப்பு
மேலும், ஏற்கனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநிலங்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான உரிமைகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதுபோன்ற நிலையில், மாநிலங்களின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் வகையில் இருக்கும் இந்தக் கமிஷனின் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செயல்பாட்டின் இருக்கும் பரிந்துரை
எனவே, தற்போது செயல்பாட்டில் இருக்கும் நிதி ஆணையத்தின் விதிமுறையான, 1971ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நிதியை பகிர்ந்து அளிக்கவேண்டும் என்று, மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தும், சுகாதாரத்தை பேணியும் வரும் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் நிதி ஆதாரம் மறுக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் நிதி
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக், 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, 2011ம் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு நிதி ஒதுக்கினால் தென் மாநிலங்கள் மத்திய அரசின் நிதி உதவியில் பெரும் பங்கை இழக்க நேரிடும். இதனால், கேரளாவுக்கு மட்டும் ரூபாய் 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.