சமூக வலைதளத்தை கண்காணிக்க மத்திய அரசு போட்ட மாஸ்டர் பிளான்.. வெளியே வந்த அதிர்ச்சி திட்டம்!
சமூக வலைதளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த 4 வருடத்தில் 7 முறை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த 4 வருடத்தில் 7 முறை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகமான என்டிடிவி நடத்திய சோதனை மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. சமூக வலைதளங்களில் வரும் தேசத்திற்கு எதிரான போஸ்டுகளையும், அரசுக்கு எதிரான போஸ்டுகளையும் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
மக்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் பயன்பாட்டை கண்காணிக்க போவதாக கூறியது.ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின் இதில் இருந்து கடைசியில் என்று மத்திய அரசு பின்வாங்கியது.
7 முறை தனியாரை அணுகினார்கள்
என்டிடிவி நடத்திய சோதனை மூலம், மத்திய பாஜக அரசு 7 முறை இப்படி சமூக வலைத்தளத்தை கட்டுப்படுத்த எண்ணி, தனியார் நிறுவனங்களை அணுகி இருக்கிறது. மோடி பதவி ஏற்றபின் தொடங்கிய இந்த பணி கடந்த மார்ச் மாதம் வரை நடந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசு சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை கட்டுப்படுத்த திட்டமிட்டு தனியார் நிறுவனங்களை அணுகி உள்ளது.
செய்தியாளர்களை கட்டுப்படுத்த
அதேபோல், ஒருமுறை சமூக வலைத்தளங்களில் இயங்கும் செய்தியாளர்களை கட்டுப்படுத்த மட்டுமே, தனியார் நிறுவனம் ஒன்றை அணுகி உள்ளது. அதாவது அரசுக்கு எதிராக எழுதும் சில செய்தியாளர்களின் போஸ்டுகள், டிவிட்டுகள் சமூக வலைதளத்தில் பலரின் கண்ணுக்கு தெரியாமல் போகும் வகையில் மறைக்க, சில தனியார் நிறுவனங்களை அணுகி உள்ளது. மாறாக அரசுக்கு ஆதரவாக பேசுபவர்களின் செய்திகள் வைரலாக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
மக்கள் மற்றும் ஆதார்
அதுமட்டுமில்லாமல் மக்கள் சமூக வலைதளத்தில் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையும் கண்காணிக்க மூன்று முறை தனியார் நிறுவனங்களை அணுகி உள்ளது. முக்கியமாக இடையில் நடந்த மாநில தேர்தல்களுக்கு முன் சரியாக இந்த அறிவிப்பை வெளியிட்டு டெண்டர் விட்டு இருக்கிறார்கள். கடைசியில் நடந்த அறிவிப்பின் போது, அந்த செய்தி எல்லோருக்கும் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
பின்வாங்கினார்
இந்தநிலையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் திடீர் என்று பின்வாங்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றம் கண்டித்த பின் இந்த முடிவை அறிவித்துள்ளது. இதில் இன்னும் சரியான கொள்கையை வரையறுக்கவில்லை என்று கூறியுள்ளது. அதனால் இப்போதைக்கு சமூக வலைத்தளத்தை கண்காணிக்கும் குழுவை உருவாக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.