பந்தாடும் மத்திய- மாநில அரசுகள்: ஈகோ பிரச்சினையில் அல்லாடும் அர்ச்சனா ஐ.பி.எஸ்
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ், சி.பிஐ-யின் கூடுதல் இயக்குநராக மே 8-ம் தேதி அன்று டெல்லியில் பதவி ஏற்ற சில மணி நேரங்களிலேயே தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அர்ச்சனா நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், அவர் சி.பி.ஐ கூடுதல் இயக்குநராகப் பதவி வகிக்க இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்
தமிழகத்தில் சஸ்பெண்ட், டெல்லியில் செயல்பட முடியாத நிலை என இருபுறமும் சிக்கல் ஏற்பட்டுள்ளது அர்ச்சனா ராமசுந்தரத்திற்கு. அவர் விஷயத்தில் அப்படி என்னதான் நடந்தது?
தமிழகத்தில் தொடங்கிய பணி
1980-ம் வருடம் ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தவர் அர்ச்சனா. பூர்வீகம் உத்தரப் பிரதேசம். கேடர் தமிழகம். இவர் பணி தொடங்கியது தமிழகத்தில்தான். தமிழ்நாட்டில் பல்வேறு பொறுப்புக்களை வகித்த அர்ச்சனாவின் கணவரான ராமசுந்தரமும் ஐ.ஏ.எஸ். அதிகாரி.
முத்திரைத்தாள் ஊழல்
முத்திரைத்தாள் ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்தபோது, அதன் உயர் அதிகாரியாக இருந்தவர் அர்ச்சனா. ஊழல் கதாநாயகன் தெல்கியிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியாத நிலையில் அர்ச்சனா களத்தில் இறங்கி ஏராளமான தகவல்களை வெளிக் கொண்டு வந்தார்.
திமுக ஆட்சிகாலத்தில்
ராமசுந்தரம் பொதுப்பணித் துறை அரசு செயலராக இருந்தபோதுதான் தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை உருவாகின. தி.மு.க ஆட்சியின் கடைசி கட்டத்தில் ராமசுந்தரம் விருப்ப ஓய்வில் போய்விட்டார்.
பந்தாடப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் முறைகேடு என்று சொல்லி விசாரணை கமிஷன் அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா, அர்ச்சனாவை டம்மி பதவியான சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்குத் தூக்கியடித்தார். புதிய தலைமைச் செயலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக தகவல் தரும்படி ராமசுந்தரத்தை ஆளும் தரப்பு அணுகியபோது அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அர்ச்சனா- ராமசுந்தரம் ஆகியோர் ஆளும் தரப்பின் கோபத்தை சம்பாதித்தனர்.
மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பம்
ஜெயலலிதா அரசில் வேறு எந்த முக்கியப் பொறுப்பும் கிடைக்காது என்று தெரிந்ததால், மத்திய அரசுப் பணிக்குப் போய்விட நினைத்தார். சி.பி.ஐயில் கூடுதல் இயக்குநர் பதவி காலியானது. அதைப் பெறுவதற்காக முறைப்படி மாநில அரசிடம் விண்ணப்பித்தார்.
மத்திய- மாநில அரசுகள்
இந் நிலையில் தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக ராமானுஜம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு நோ சொன்னதால், முதல்வர் ஜெயலலிதா அரசு கோபம் கொண்டது.
அப்பாயின்மென்ட் இல்லை
இந்த நேரத்தில், அர்ச்சனாவை விடுவிக்கச் சொல்லி மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. 3 மாதங்களாகப் பணி விடுவிப்பு கடிதம் கேட்டு மாநில அரசிடம் அல்லாடினார் அர்ச்சனா. ஆனால், மாநில அரசு பதிலே அனுப்பவில்லை. முதல்வரை நேரில் சந்திக்க முயன்றார் அர்ச்சனா. ஆனால் அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை.
சஸ்பெண்ட் உத்தரவு
இந்தச் சூழ்நிலையில்தான், மாநில அரசின் பணி விடுவிப்பு கடிதம் பெறாமலே, நேரடியாக டெல்லி போய் சி.பி.ஐயின் கூடுதல் இயக்குநராகப் பதவி ஏற்றார். இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, அர்ச்சனா மீது கோபமாகி, உடனே சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
பாஜக முட்டுக்கட்டை
பாஜகவும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அர்ச்சனாவை சிபிஐ பதவியில் உட்காரவிட மாட்டோம்' என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அர்ச்சனா விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.