தூர்தர்ஷனுக்கு மத்திய, மாநில அரசு துறைகள் ரூ.79 கோடி கடன் பாக்கி!
டெல்லி: மத்திய, மாநில அரசு துறைகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.79 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு லோக்சபாவில் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விளம்பர வருவாய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், "தூர்தர்ஷனுக்கு கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் விளம்பரங்கள் வாயிலாக ரூ.1,100.27 கோடியும், 2012-13 ஆம் நிதியாண்டில் ரூ.1,298.16 கோடியும் வருமானம் கிடைத்தது. 2013-14 ஆம் நிதியாண்டில், ரூ. 1,295.86 கோடியும், 2014-15ஆம் நிதியாண்டில் (மே மாதம் வரை) ரூ.87.76 கோடியும் விளம்பரங்கள் மூலம் வருமானம் கிடைத்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
வரிபாக்கி
மத்திய, மாநில நிறுவனங்களின் வரிபாக்கி தொடர்பான கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சர், ''2014 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பல்வேறு மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள் ரூ.79.66 கோடி கடன் பாக்கி வைத்திருப்பதாக பிரசார் பார்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
கடன் பாக்கி
இதில், விளம்பரம் மற்றும் திரைக்காட்சி விளம்பரத்துறை இயக்குநரகம் மட்டுமே ரூ.6.94 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. இந்த தொகையை 2013-2014 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்காக தூர்தர்ஷனுக்கு தர வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.