சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆராய விரைவில் மத்திய குழு தமிழகம் வகை- நஜீம் ஜைதி
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய தேர்தல் ஆணையக் குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையும் சுமூகமாக நடத்துவது குறித்து, அனைத்துக் கட்சி கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.
அதில், ஐந்து மாநில அரசியல் கட்சிகளுடன் சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழுவுடன் தமிழகம் வர உள்ளோம். தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சிகளிடையே சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் பணவிநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நஜீம் ஜைதி.