காவிரியின் குறுக்கே மேகதாது அணை... கர்நாடகாவிடம் விளக்கம் கேட்கிறது நீர்வள கமிஷன்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது குறித்து மத்திய நீர்வள கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.
டெல்லி: காவிரியின் குறுக்கே, 5,912 கோடி ரூபாய் செலவில் கர்நாடக மாநில அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது அணை பற்றி மத்திய நீர்வள கமிஷன், விளக்கம் கேட்டுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் அர்காவதி மற்றும் காவிரி ஆறு இணையும் பகுதி அருகே மேகதாது என்ற இடத்தில் அணை ஒன்றை கட்ட கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு 5, 912 கோடி ரூபாய் செலவில், 67.14 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையையும் , 400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அணை அமைக்கப்பட்டால், 4,716 ஹெக்டேர் பரப்பில் உள்ள காடு நீரில் முழ்கும். பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு 16.1 டி.எம்.சி., குடிநீர் வழங்க உதவும் இந்த அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி, மத்திய நீர்வள கமிஷனுக்கு கர்நாடக மாநில அரசு விரிவான அறிக்கையை அனுப்பியது.
ஆனால், இந்த அணை திட்டம் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பிற்கு எதிராக உள்ளது என்று கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த சூழ்நிலையில் பெங்களூருவில் உள்ள மத்திய நீர்வள கமிஷின் பிராந்திய அலுவலகம் சார்பில், கர்நாடக மாநில அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், "மத்திய நீர்வள அமைச்சகம் கேட்டதற்கு ஏற்ப, விளக்க அறிக்கையை தயாரித்து வருகிறோம். விரைவில், டெல்லியில் உள்ள மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பி வைப்போம்.
இந்த அணை திட்டம், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பிற்கு எதிராக உள்ளதா என்ற சந்தேகம் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல், காவிரி ஆற்றில் நீர் செல்வதை இந்த அணை தடுக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அளவில் எங்கள் விளக்க அறிக்கை அமையும்." என்று தெரிவித்துள்ளனர்.