மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
இந்த அகவிலைப்படி உயர்வு 2016 ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.