உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜே. எஸ்.கெஹர். இவரது பதவி காலம் இந்த மாதம் 27ம் தேதியோடு முடிவடைகின்றது. இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியது.
அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போது தலைமை நீதிபதியாக இருப்பவர் தான் பரிந்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கெஹரிடம் சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போது நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா பெயரை ஜே.எஸ்.கெஹர் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாட்னா, டெல்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் தீபக் மிஸ்ரா. நிர்பயா, ஜல்லிக்கட்டு, யாகூப் மேமன் வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.