தமிழக எதிர்ப்புக்கு பலனில்லை- சேலம் இரும்பாலை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்
சேலம் இரும்பாலையில் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
டெல்லி: பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
சேலம் இரும்பாலையில் 70,000 டன் பொருட்கள் உருட்டாலையிலும், 3 லட்சத்து 64 ஆயிரம் டன் பொருட்கள் வெப்ப உருட்டாலையிலும், 1 லட்சத்து 80 ஆயிரம் டன் பொருட்கள் எஃகு உற்பத்தி கூடத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே துருப்பிடிக்காத எஃகு மூலம் மிக அகலமான தகடுகள் உற்பத்தி செய்யும் கூடம் இங்குதான் முதன் முதலில் தொடங்கப்பட்டது.
இங்கு சுமார் 2,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலை நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதன் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த எதிர்ப்பையும் மீறி சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கொள்கை ரீதியாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக எம்.பி. ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதில்:
தமிழகத்தின் சேலம் இரும்பாலை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்திய உருக்காலை ஆணையம் ரூ.2,200 கோடி செலவில் இந்த ஆலையை நவீனப்படுத்தியும், விரிவாக்கம் செய்த பிறகும் கூட நஷ்டமே ஏற்பட்டு வருகிறது.
இதனால் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வது என கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இவ்வாறு விஷ்ணு தியோ சாய் கூறினார்.