ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: போலி ஓட்டுநர் உரிம பிரச்சினையை தீர்க்க ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் வங்கிக் கணக்கு, பான் எண், கேஸ் மானியம், உரம் மானியம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதை கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசின் 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அரசு கட்டாயமாக்கியது.
சத்துணவு திட்டத்துக்கு ஆதார் எண் கேட்கப்பட்டதை அடுத்து எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனிநபரின் உரிமையை ஆதார் மீறுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மத்திய அரசோ ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்துள்ளது.
போலி வாகன ஓட்டுநர் உரிமம் மூலம் வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளாகும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசு இந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். மேலும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைப்பது குறித்து சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.