'மேக் இன் இந்தியா' லோகோ சுவிஸ் வங்கியில் இருந்து சுடப்பட்டதா? மத்திய அரசு மறுப்பு!!
டெல்லி: பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 'மேக் இன் இந்தியா'வுக்கான லோகோ, சுவிஸ் நாட்டின் வங்கியின் லோகோவைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘மேக் இன் இந்தியா' என்ற திட்டம் பிரதமர் நரேந்திரமோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் லோகோவாக தொழில்துறை சக்கரங்கள் உள்ளடக்கிய சிங்கத்தின் படம் இடம்பெற்று உள்ளது.
இந்த படம்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் மண்டல வங்கியின் விளம்பர படம் போல இருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சுவிஸ் நகரில் ஓடும் ரயில்களில் அந்த வங்கியின் விளம்பரம் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் அந்த இடம்பெற்றுள்ள சிங்க லோகோவைப் போலவே மேக் இன் இந்தியாவின் லோகோவும் இருக்கிறது.
இதனால் சுவிஸ் வங்கியின் லோகோவை இந்தியா பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து உள்ளது.
இதுகுறித்து தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் அமிதாப் கான்ட் கூறுகையில், மேக் இன் இந்தியா லோகோவில் உள்ள சிங்கம் துடிப்பானவை. சுவிஸ் வங்கியின் லோகோவில் உள்ளது போல் சலிப்பான, மந்தமான சிங்கங்கள் இல்லை. மேக் இன் இந்தியாவில் உள்ள சக்கரங்கள் தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை குறிப்பதாக அமைக்கப்பட்டு உள்ளது. மிக பழமையான காலத்தில் இருந்தே சிங்கம் இந்தியாவின் உத்தியோகப்பூர்வ சின்னமாக இருந்து வருகிறது என்றார்.