தென்மாநிலங்களின் வரியில் வடமாநிலங்களை வளப்படுத்தும் மத்திய பாஜக அரசு: சந்திரபாபு நாயுடு சாடல்!!
தென்மாநிலங்களின் வருவாயை வைத்து வடமாநிலங்களை வளப்படுத்துகிறது மத்திய பாஜக அரசு என சாடியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
அமராவதி: தென் மாநிலங்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாயை கொண்டு வடமாநிலங்களை மட்டும் மத்திய பாஜக அரசு வளப்படுத்துக்கிறது என அதிரடி குற்றம்சாட்டியுள்ளார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திரா சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என எதுவும் இல்லை. அனைத்தும் மக்களின் பணம்.
வடமாநிலத்தை வளப்படுத்துவதா?
தென் மாநிலங்கள்தான் மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகிறது. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஏன் இந்த பாகுபாடு?
எங்களது வரியை வைத்து...
ஆந்திரா மாநிலம் இந்த நாட்டின் அங்கம் இல்லையா? ஏன் எங்களது வரி வருவாயை வடக்கு, கிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு கொடுக்கிறீர்கள்? அந்த நிதியை ஏன் எங்களுக்கு தர மறுக்கிறீர்கள்?
சிறப்பு அந்தஸ்து மறுப்பு
தேசிய கொள்கை வகுப்பு அகாடெமி, தேசிய உயிரியல் ஆய்வு மையங்களை ஏன் ஆந்திராவில் அமைக்கவில்லை? ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது.
உறுதி மொழி எங்கே?
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியது மத்திய அரசு. அப்படியானால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆந்திராவுக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது மத்திய அரசு? ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்ட போது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைத்தானே நிறைவேற்ற கோருகிறோம்.. அதற்கு அப்பால் நாங்கள் எதனையும் கேட்கவில்லையே?
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.