காவிரி நடுவர்மன்ற உத்தரவே இறுதியானது.. அப்பீலுக்கு அனுமதியில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
காவிரி பிரச்சினையில் நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்ய தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டில் இறுதி தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் காவிரியிலிருந்து வழங்கப்பட வேண்டும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மாதம் 18ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா என வாத, விவாதம் நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள், இந்த மனுக்கள் விசாரணைக்கு உரியவைதானா என்று முடிவெடுப்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை அக்டோபர் 24ம் தேதி (நேற்று முன்தினம்) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்படி கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தரப்பில் நேற்றுமுன்தினம் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், "ராணுவம், பாதுகாப்பு படைகள் தொடர்பான நடுவர் மன்றங்களின் தீர்ப்புகள் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கு வரமுடியாது. மற்றபடி, நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளை மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு அனைத்து முகாந்திரமும் உள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தீர்ப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. எனவே, தமிழக அரசின் விளக்கம் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களும் இதே போன்ற வாதங்களை தான் எழுத்துபூர்வ வாதத்தில் முன்வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மத்திய அரசு எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய மேலும் 2 நாட்கள் அவகாசம் கோரியிருந்தது. அதன்படி இன்று 17 பக்க எழுத்து பூர்வ வாதத்தை அது சமர்ப்பித்தது.
உச்சநீதிமன்றத்திற்கு ஈடான அதிகாரம் கொண்டது நடுவர் மன்றம் என்று கூறியுள்ள மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடர முடியாது. அதேபோல நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை நாடாளுமன்றம் மூலமாகவே தீர்க்க வேண்டும் என்று, அரசியல் சாசனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றும், நான்கு மாநிலங்களும், இந்த விசயத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக சட்டத்தில் இடமே இல்லை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்து, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பை வழங்க உள்ளது.