செல்போன்களை கண்காணிக்க இத்தாலி நிறுவனத்தை அணுகிய தமிழ்நாடு சைபர் கிரைம்: விக்கிலீக்ஸ்
டெல்லி: இ-மெயில் உரையாடல்கள் மற்றும் செல்போன் பேச்சுக்களை ஒட்டு கேட்பதற்காக, இந்தியாவின் பல்வேறு மாநில போலீசார் மற்றும், பாதுகாப்பு ஏஜென்சிகள் இத்தாலியை சேர்ந்த ஒரு உளவு கருவி சப்ளை நிறுவனத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ள பரபரப்பு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இத்தாலி நிறுவனம்
உளவு கருவிகள் சப்ளையில் முன்னணியில் உள்ள இத்தாலியை சேர்ந்த நிறுவனத்திடம், கருவிகளை கேட்டு, இ-மெயில் மூலமாக, இந்தியாவின், பல்வேறு விசாரணை அமைப்புகளும், தொடர்புகொண்டுள்ள தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
சமீபத்தி்ல் கூட
ஆந்திர காவல்துறையின் உளவுத்துறை ரூ.1 முதல் 1.2 மில்லியன் டாலர் செலவில், செல்போன் உரையாடல் இடைமறிப்பு, கருவியை கேட்டு இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது. இவ்வாண்டு ஜூன் மாதம் இந்த கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்கள்
மேற்கு வங்கம் மாநிலம், பிதாநகர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம், கடந்த ஆண்டு இதுபோன்ற கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளது. நவி மும்பை துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஆந்திரா போலீசின் சிறப்பு உளவு பிரிவு, கர்நாடக உளவு பிரிவு, குஜராத் உளவுத்துறை, டெல்லி போலீசின் பொருளாதார பிரிவு, மும்பை போலீசின் தீவிரவாத ஒழிப்பு குழு, மத்திய அரசின் அமைச்சரவை செயலகம் போன்ற பல அமைப்புகளும் கருவி கேட்டுள்ளன.
தமிழ்நாடு சைபர் கிரைம்
தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவும், இந்த அமைப்பை தொடர்பு கொண்டுள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. மொபைல் சிக்னல்களை டிராக் செய்யவும், கண்காணிக்கவும் தங்களிடம் தற்போது போதிய பலம் இல்லை என்று கூறி புதிய கருவிகளை கேட்டுள்ளது தமிழ்நாடு சைபர் கிரைம்.
தப்பில்லையே
ரா போன்ற இந்திய உளவு அமைப்பும், இக்கருவிகளை பெற போட்டி போட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரத்தில் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், உளவு என்பது தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை. விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களால் எந்த பின்னடைவும் கிடையாது. இது முழுக்க தேச விரோத சக்திகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்தான். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்று தெரிவித்தனர். அதேநேரம், பொதுமக்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று இதுகுறித்த ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.