500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தலாம்?
500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தி உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆக்ரா: ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சற்று தணிக்கும் வகையில் அத்திட்டத்தில் பிரதமர் மோடி சிறிய திருத்தத்தை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். அன்று முதல் ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் எடுத்து வருகின்றன. என்றாலும் போதிய அளவு 100 ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் இல்லாததால் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தி விட்டார்.
இந்த நிலையில்தான் இன்று ஆக்ராவில் பேசிய பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான திருத்தம் செய்வேன் என்று பேசினார். இது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது.
மாற்றம் செய்யலாம் என்ற மோடியின் பேச்சால் அவர் ரூபாய் நோட்டு ஒழிப்புத் திட்டத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளாரா என்ற எதிர்ராப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களின் டென்ஷனைக் குறைக்கும் வகையில் சில அறிவிப்புகளை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மட்டும் தளர்த்தி பழைய ரூபாய் நோட்டுக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிட வாய்ப்புண்டு. அதேசமயம் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் சற்று கூடுதலாக்கப்படும்.
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை அனைத்து இடங்களிலும் வாங்க மத்திய அரசு உத்தரவிட வாய்ப்புண்டு. தற்போது அதை வங்கிகளில் மட்டுமே மாற்ற முடிகிறது. அதைத் தளர்த்தி 500 ரூபாய் நோட்டை முழுமையாக விலக்கிக் கொள்ளும் வரை பயன்படுத்த அரசு அனுமதிக்கலாம்.
அதேபோல, 100, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவில் அச்சிடப்படும் வரை பழைய நோட்டுக்களைப் புழக்கத்தில் இருக்க மத்திய அரசு அனுமதிக்கவும் வாய்ப்புண்டு.