உத்தரகாண்ட் ஜனாதிபதி ஆட்சி ரத்து... சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு!!
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு அமல்படுத்திய ஜனாதிபதி ஆட்சியை ரத்து அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது திங்களன்று விசாரணை நடைபெற உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா மகன் தலைமையில் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக திடீரென 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த அதிருப்தியாளர்கள் பாரதிய ஜனதாவுடன் கை கோர்த்தனர். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையில் கடந்த மார்ச் 28-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஹரிஷ் ராவத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார் ஆளுநர். மத்திய அரசும் இதனை ஏற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
ஹைகோர்ட்டில் அப்பீல்
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக ஹரிஷ் ராவத், நைனிடாலில் உள்ள உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை முதலில் தனிநீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஸ்த் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பாக நடைபெற்று வந்தது.
மத்திய அரசை வெளுத்த நீதிபதிகள்
இந்த விசாரணையின் போது, சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தது, ஜனநாயகத்தின் வேரை வெட்டி சாய்த்தது போலாகும்; மத்திய அரசு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைத்து விட்டது என நீதிபதிகள் சாடினர். மேலும் புதன்கிழமையன்று நடந்த விசாரணையின்போது, முழுமையான அதிகாரம், யாருடைய மனதை வேண்டுமானாலும் கெடுத்து விடும். ஜனாதிபதியின் முடிவும் கூட தவறாக போகலாம். எனவே அவரது முடிவும், நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என அதிரடி காட்டினர்.
ஜனாதிபதி ஆட்சி ரத்து
இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில், உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு அளித்தனர். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு விலக்கிக்கொண்டு, யாரோ ஒருவரை அரசு அமைக்க அனுமதித்தால் அது நீதியை பரிகாசம் செய்தது போலாகும் எனவும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
என்ன சொல்கிறது ஹைகோர்ட்
மேலும் உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தது, உச்சநீதிமன்றம் வகுத்த சட்டவிதிகளுக்கு முரணானது ஆகும்; ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னிலையில் வைக்கப்பட்ட ஆவணங்கள், வேண்டுமென்றே வைக்கப்பட்டவை. அவை நீதிமன்ற பரிசீலனைக்கு உகந்தவைதான். 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். கட்சி தாவி அரசியல் சாசனத்துக்கு பாவம் செய்ததற்கு அவர்கள் உரிய விலையை கொடுத்தாக வேண்டும். உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு முந்தைய நிலை தொடரும். இதன் பொருள், ஹரிஷ் ராவத் அரசு புத்துயிர் பெறுகிறது. வரும் 29-ந் தேதி சட்டசபையில் ஹரிஷ் ராவத் அரசு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை நீதிபதிகள் நிராகரித்து, நாங்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாங்களே தடை விதிக்க மாட்டோம். நீங்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தடை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி விட்டனர். இந்த அதிரடித் தீர்ப்பு மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இன்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.
மரண அடி விழுமோ?
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு தேதியை ஆளுநர் நிர்ணயித்துவிட்டு அந்த பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னரே திடீரென அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி எப்படி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும்? என்பதுதான் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் கேள்வி. இந்த கேள்விக்கு பதில் இல்லாத நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறது மத்திய அரசு. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இன்னும் பலமான மரண அடியைத்தான் மத்திய அரசு வாங்க நேரிடும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
சட்டசபை நிலவரம்
உத்தரகாண்ட் சட்டசபையில் தற்போது காங்கிரஸ்- 27; பாஜக- 28; இதர கட்சிகள்- 6 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் அல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் உள்ளனர்.