சிபிஐக்கு எதிரான குவஹாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை
அசாம் மாநிலத்தின் குவஹாத்தி உயர்நீதிமன்றம் சிபிஐ அமைப்பு என்பது சட்டவிரோதமானது. அது போலீஸ் அமைப்பே அல்ல என்று அதிரடி தீர்ப்பை அளித்தது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஸ்பெக்ட்ரம் வழக்கு, சீக்கியர் படுகொலை வழக்கு போன்றவற்றிலும் இந்த தீர்ப்பு முட்டுக்கட்டை போடும் நிலையை உருவாக்கியது,
இதனால் உடனடியாக இன்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் குவஹாத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
கேவியட் மனு
இதைத் தொடர்ந்து தமது கருத்தை கேட்காமல் அரசின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என நவேந்திர குமார் கேவியட் மனுத்தாக்கல் செய்தார். நவேந்திர குமார் தாக்கல் செய்த மனு மீதுதான் சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்று குவஹாத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
தீர்ப்புக்கு தடை
இந்நிலையில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சனா தேசாய் அடங்கிய அமர்வு இன்று மாலை மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் குவஹாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பாக பதிலளிக்க உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணண டிசம்பர் 6-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.