கெயில் எரிவாயு குழாய் விவகாரம்: மரங்களை வெட்ட அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு!
டெல்லி: தமிழகத்தில் கெயில் எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்காக மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மத்திய அரசின் கெயில் நிறுவனம், கேரளா-கர்நாடகா இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்துக்காக தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கெயில் நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஏ.வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார். கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இயற்கை எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசின் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 17-ந்தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இடையில் இத்திட்டத்தில் குழாய்களைப் பதிக்கும் வகையில் சில இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய அரசு பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து இடைக்காலத் தடை இருப்பதாலும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இது தொடர்பான மற்ற மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவை விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘குழாய்களைப் பதிப்பதற்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசின் மனுவை முக்கிய மனுவுடன் சேர்த்து விசாரிக்காமல் தனியாக பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கெயில் எரிவாயுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியாக வேண்டும் என்று மத்திய அரசு மும்முரம் காட்டி வருவது தமிழக விவசாயிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.