முல்லைப் பெரியாறில் புதிய அணை:சுற்றுச் சூழல் ஆய்வுக்கு கேரளாவுக்கு அனுமதி அளிக்கவில்லை- மத்திய அரசு!
டெல்லி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆராய கேரளாவுக்கு எந்த ஒரு அனுமதியும் அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும் அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. தமிழகத்தின் நீண்டகால சட்டப் போராட்டத்துக்கான வெற்றியாக இது கருதப்பட்டது.
ஆனால் கேரளாவோ விடாப்பிடியாக முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த மாதம் மத்திய அரசிடம் புதிய அணைக்கான அனுமதியை கேரளா கோரியிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்டு புதிய அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யலாம் என்று கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனால் கேரளா ஆய்வு நடத்தி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்றே அறிக்கை அளித்து புதிய அணை கட்டக் கூடும் என்பதால் தென் தமிழகத்தில் விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழக அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் மத்திய அரசோ, கேரளாவுக்கு அப்படி எந்த ஒரு அனுமதியையும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.