மாசு கலந்த காவிரி நீரை தமிழகத்திற்கு தருகிறது கர்நாடகா... மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!
கர்நாடக மாநிலத்தில் இருந்த மாசு கலந்த காவிரி நீரையே தமிழகத்திற்கு திறந்துவிடுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
டெல்லி : கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு மாசு கலந்த காவிரி நீரையே திறந்துவிடுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் நகரின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில் கலக்கின்றன.
காவிரியில் கலக்கும் கழிவால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது. அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த கழிவுகளால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, கர்நாடகத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வேறு வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்த பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியை கர்நாடகம் மாசுபடுத்துவது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 6 மாதங்களில் அறிக்கையை தாக்கல் உத்தரவிட்டது. கடந்த ஜூலை மாதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கர்நாடகா மாசடைந்த காவிரி நிரையே தமிழகத்துக்கு திறந்து விடுவதாக கூறியுள்ளது.