நேதாஜி பற்றிய மேலும் 25 ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான இறுதி ஆவணங்களை மத்திய அரசு நேற்று இணையதளத்தில் வெளியிட்டது.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றும் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து 1964-ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் பல தகவல்கள் கூறுகின்றன.
எனினும் அவருடைய கடைசி கால வாழ்க்கை பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருவதால், அவரை பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் அதை ஏற்று, நேதாஜி பிறந்தநாளான கடந்த ஜனவரி 23-ந்தேதியன்று, நேதாஜி பற்றிய 100 கோப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர், உள்துறை அமைச்சகத்திடம் இருந்த 50 கோப்புகள் மார்ச் 29-ம் தேதி வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி 25 கோப்புகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், நேதாஜி தொடர்பான மேலும் 25 ஆவணங்களை மத்திய கலாசாரத்துறை நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நான்காவது தொகுப்பாக வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகம், உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களிடம் இருந்தவை ஆகும்.
இதில், நேதாஜி காணாமல் போனது தொடர்பான முகர்ஜி கமிஷன் விசாரணை, நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான விவரம், பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளன.
மேலும் நேதாஜியை போர் குற்றவாளி என ஒருபோதும் சித்தரிக்கவில்லை என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது. இவை, 1968-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரையிலான கோப்புகளும் ஆகும்.