மே.வங்க சட்டசபை தேர்தலில் பாஜக வெல்வதற்காகத்தான் குடியுரிமை திருத்த மசோதா?
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் முனைப்புடன் பாஜக இருக்கிறது என்பது அம்மாநில அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இந்துக்களும் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். பல தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்திகளாகவும் உருவெடுத்துள்ளனர். அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பக்கமே நிற்கின்றனர்.
வங்கதேசத்தில் அகதிகளாக வந்த இந்துக்களான மதுவாஸ் (Matuas) மற்றும் முஸ்லிம்கள் ஆதரவுடன்தான் 2011 சட்டசபை தேர்தலில் 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினார் மமதா பானர்ஜி. அப்போது மதுவாஸ் தலைவராக இருந்த பினாபானி தேவி தாக்கூரின் முழுமையான ஆதரவு மமதாவுக்கு இருந்தது.
மமதா வென்றது எப்படி?
இதனால் 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜியால் வெற்றிக் கொடியை பறக்கவிட முடிந்தது. ஆனால் 2016-ல் பினாபானி தேவி தாக்கூரின் மரணத்துக்குப் பின்னர் நிலைமை தலைகீழானது.
பாஜக பக்கம் வீசிய அலை
அதுவரை திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் வீசிக் கொண்டிருந்த அலை அப்படியே பாஜக பக்கம் சாய்ந்தது. வங்கதேச இந்து அகதிகள் மற்றும் ஜங்கல்மகால் பிராந்திய பழங்குடிகள் ஆதரவு பேரலையாக பாஜகவுக்கு கிடைத்தது. முடிவடைந்த லோக்சபா பாஜகவின் காவி கொடி மேற்கு வங்கத்தில் பட்டொளி வீசி பறக்கவும் இந்த ஆழிப்பேரலைதான் காரணமாக இருந்தது.
பாஜக அமோக வெற்றி
பாஜக வென்ற 18 தொகுதிகளில் 10-ல் வங்கதேச அகதிகள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த 10 தொகுதிகளில் மட்டுமே 70 முதல் 80 சட்டசபை தொகுதிகள் அடங்குகின்றன. ஜங்கல்மகால் பகுதியையும் சேர்த்தால் வரும் சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுடன் 100க்கும் அதிகமான தொகுதிகளில் கடுமையாக மோதவும் முடியும்; கணிசமான வெற்றியை பெற முடியும் என்பது பாஜகவின் கணக்கு.
திரிணாமுல் குழப்பம்
இதனை உணர்ந்துதான் குடியுரிமை திருத்த மசோதாவை திரிணாமுல் ஆதரிக்கும்; ஆனால் அனைத்து மதத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற ஒரு நிலைப்பாட்டை மமதா பானர்ஜி மேற்கொண்டார். மேலும் பொதுவாக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்காளிகள் ஊடுருவல், ஆதிக்கத்தால் அவர்கள் மீதான வெறுப்புணர்வு எப்போதும் இருந்து வருகிறது.
அஸ்ஸாமில் போராட்டம்
அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்ட போது 12 லட்சம் இந்துக்கள் அகதிகளாக இருப்பதும் வெளியே வந்தது. தங்களது நிலத்தை பிற இன மக்கள் ஆக்கிரமிப்பதை விரும்பாத அஸ்ஸாமிய பழங்குடிகள் இப்போது உக்கிரத்துடன் போராடி வருகின்றனர். அதேநேரத்தில் அஸ்ஸாமில் வங்காளிகள் வசிக்கும் பகுதிகளில் அமைதியும் நிலவுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போராடும் வடகிழக்கு மாநிலங்கள்
அஸ்ஸாம் மாநிலத்துக்கு நேர்ந்தது தங்களுக்கும் நடக்கும் என்பதால்தான் ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகின்றன. பாஜகவை அரியாசனத்தில் அமர்த்திய அஸ்ஸாமியர்கள்தான் இப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் உருவபொம்மைகளை எரிக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தாலும் கூட இதை ஏற்க மறுத்தே படுதீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
திரிபுராவில் பாஜக கூட்டணி கட்சி
திரிபுராவில் பாஜகவுடன் இணைந்து இடதுசாரிகளை வீழ்த்திய பழங்குடிமக்கள் இப்போது பாஜகவுக்கு எதிராக போராடுகின்றனர். வங்காளிகளின் ஆதிக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தனி நாடு கேட்டு ஒருகாலத்தில் போராடி இன்று தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தும் பழங்குடிகள்தான் இப்போதும் முழு வீச்சான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.