மத்திய அரசின் குட்டு அம்பலமானது... கர்நாடக தேர்தலுக்காகத் தான் மேலாண்மை வாரியம் தாமதம்!
கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி : கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் குழப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது. எனவே 3 மாத காலத்திற்கு அதாவது கர்நாடகா தேர்தல் முடியும் வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பு செய்வதற்கு கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே என்று தமிழக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தனர். இதற்கு வலு சேர்ப்பது போல உச்சநீதிமன்றத் தீர்ப்பில் விளக்கம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக்கண்டித்து தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதது நீதிமன்ற அவமதிப்பு எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
எந்த மாநிலம் முக்கியம்?
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு தமிழகம் முக்கியமா, கர்நாடகா முக்கியமா? என்ற போட்டியில், நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக கர்நாடகாதான் முக்கியம் எனக்கருதுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அங்கு வலுவாக உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் பாரதிய ஜனதா தேர்தல் களத்தில் கடும் சரிவை சந்திக்கும் என கருதுகிறது அக்கட்சி.
கர்நாடக மக்களை எதிர்கொள்ள
இதனால், எப்படியாவது மேலாண்மை வாரியம் அமைப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்தது. அந்த முயற்சிக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பு உதவியாக அமைந்துவிட்டது. தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வதைவிட, கர்நாடகா தேர்தல் களத்தில் மக்களை எதிர்கொள்வதையே கடினமான காரியமாக கருதுகிறது மத்தியில் ஆளும் கட்சி.
3 மாதம் அவகாசம் கேட்பு
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மனுவில், 3 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. எப்படி இருந்தாலும், 3 மாதங்களுக்குள் கர்நாடகா சட்டரிக் தேர்தல் முடிந்துவிடும். அதற்கு பிறகு தமிழக சட்டரிக் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதையும் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளலாம் என பாரதிய ஜனதா கருதி முடிவை அறிவிக்கலாம். ஏனென்றால் தமிழகத்திற்கு சாதகமான ஒரு அறிவிப்பைவெளியிடுவதில் எந்த அரசியல் பிரதிபலனும் இருக்கப்போவதில்லை என்பதே மத்திய அரசின் தற்போதைய நகர்வு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஸ்கீம் என சுட்டிக்காட்டியது ஏன்?
உச்சநீதிமன்றம் அறிவித்த 6 வார காலம் வரை பொறுத்திருந்து விட்டு தமிழக மக்களின் நலன் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு இப்போது தங்களுக்கு மக்கள் நலன் முக்கியமா அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவது முக்கியமா என்பதை நிரூபித்துள்ளது மத்திய அரசு. உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் ஒரு அமைப்பு தான், காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என்று சொல்லிவிட்டு இப்போது விளக்கம் கேட்டு மனு செய்வது ஏன் இது யாரை ஏமாற்றும் செயல் என்பதும் தான் இப்போதைய கேள்வி.