நீதிபதி ஜோசப் நியமனத்திற்கு எதிர்ப்பு... மத்திய அரசின் வாதம் சொத்தையா இருக்கே?
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு கேரளாவைச் சேர்ந்த நீதிபதி கே.எம்.ஜோசப்பை நியமிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு அதற்காக அடுக்கி வைத்துள்ள காரணங்கள் படு சொத்தையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அதாவது அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதுதான் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் முன்பு வைத்துள்ள முக்கிய பாயிண்ட் ஆகும். ஆனால் என்னவோ கேரளாவால்தான் மற்ற மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் தருவதில் பெரும் தடங்கல் ஏற்படுவது போல மத்திய அரசு செய்யும் பில்டப் பெரும் சொத்தையாக இருப்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது.
வட மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளே உச்சநீதிமன்றத்தில் அதிகம் உள்ளனர். அதேசமயம், தமிழ்நாடு, கேரளா என்று எடுத்துக் கொண்டால் தலா ஒரு நீதிபதிதான் இருக்கிறார்.
மத்திய அரசு நிராகரிப்பு
உச்சநீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் கொடுத்த பரிந்துரைகளில் ஒன்று உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பின் நியமனம். ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளது மத்திய அரசு. இதற்காக அது 3 காரணங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வைக்கும் 3 காரணங்கள்
பிராந்திய பிரதிநிதித்துவம், சீனியாரிட்டி மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின நீதிபதிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதே அந்த மூன்று காரணங்கள். ஆனால் இந்த மூன்றுமே சொத்தை காரணங்கள் என சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளத்து கே.எம்.ஜோசப்
கே.எம்.ஜோசப் குறித்து மத்திய அரசு கூறுகையில், நீதிபதி ஜோசப் கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவுக்கு உச்சநீதிமன்றத்திலும், பிற மாநில உயர் நீதிமன்றங்களிலும் போதிய பிரதிநிதித்துவம் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதியும், 3 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். மேலும் ஒரு கேரள நீதிபதி எதற்கு என்று கூறுகிறது மத்திய அரசு.
தமிழகம், கேரளாவுக்கு தலா ஒன்றுதான்
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் உச்சநீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட மாநிலங்கள் நிறைய உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் உள்ளன. தமிழகம், கேரளாவுக்குத்தான் தலா ஒரு நீதிபதி மட்டும் உள்ளனர்.
டெல்லி, மகாராஷ்டிராவுக்கு 3 நீதிபதிகள்
டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து 3 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். மகாராஷ்டிராவுக்கு 3 பேர் உள்ளனர். ஆந்திராவுக்கு 2 பேர் உள்ளனர். கர்நாடகாவுக்கு 2 பேர் உள்ளனர். உ.பி,, ம.பிக்கு தலா 2 பேர் உள்ளனர். அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா, பீகார், பஞ்சாப் -ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசத்துக்கு தலா ஒரு நீதிபதி உள்ளனர்.
சீனியாரிட்டியும் கை கொடுக்காது
சீனியாரிட்டியை முன் வைத்தாலும் கூட அங்கேயும் இடிக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தற்போது உள்ள சந்தான கெளடர், அப்துல் நாசர் ஆகியோர் நியமிக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 20 நீதிபதிகளின் சீனியாரிட்டியை தாண்டித்தான் நியமிக்கப்பட்டனர். இருவருமே கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் விஷயத்தில் சீனியாரிட்டி கண்டு கொள்ளப்படவில்லை. அதிலும் நீதிபதி நாசர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இல்லாமலேயே நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அதை அப்போது மத்திய சட்ட அமைச்சகமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டன.
தலித் நீதிபதி இல்லை
அதேபோலத்தான் அடுத்த தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோயும், தன்னை விட சீனியர்களான மதன் பி லோகுர், குரியன் ஜோசப், சிக்ரி ஆகியோரைத் தாண்டி நியமிக்கப்பட்டார். இப்படி பல உதாரணங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜோசப் விவகாரத்தில் மட்டும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. மத்திய அரசு அடுக்கியுள்ள காரணங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு நீதிபதி மட்டும்தான் சரியாக இருக்கிறது. காரணம், உச்சநீதிமன்றத்தில் கேஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு எஸ்.சி வகுப்பைச் சேர்ந்த எந்த நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒரே தலித் நீதிபதியும் கே.ஜி.பாலகிருஷ்ணன்தான். அதேபோல தற்போது உள்ள மாநில தலைமை நீதிபதிகளில் ஒருவர் கூட தலித் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் ஜனாதிபதி ஆட்சி
இத்தனை இருந்தாலும் ஜோசப் நியமன்றத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க ஒரே ஒரு காரணத்தைத்தான் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அது கடந்த 2016ம் ஆண்டு உத்தகரகாண்ட்டில் அமலாக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி செல்லாது என நீதிபதி கே.எம். ஜோசப் பிறப்பித்த அதிரடி உத்தரவுதான். இதை மனதில் வைத்துத்தான் இப்போது மத்திய அரசு ஜோசப்புக்கு எதிராக வரிந்து கட்டுவதாக சொல்லப்படுகிறது.
நீதித்துறை மீதான நம்பிக்கை
ஆனால் மத்திய அரசின் எதிர்ப்புக்கு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு நீதிபதி தனது அரசுக்கு எதிராக உத்தரவிட்டால் அவரை ஒதுக்கி வைக்க மத்திய அரசு தீர்மானத்தில் அது தவறானது. மக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை அது சீர்குலைக்கும் என்று தாக்கூர் கூறியுள்ளார்.