வெறும் 500 ரூபாய் "இன்க்ரிமென்ட்"தானா.. கடும் அதிருப்தியில் மக்கள்!
கையிருப்புப் பணத்தை விரும்பிய அளவுக்கு எடுக்க முடியாமல் மக்கள் விரக்தியில் உள்ள நிலையில் ரூ. 500 மட்டும் கூடுதலாக எடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருப்பதை மக்களிடையே வரவேற்பைப் பெற்றதாக தெரியவில்லை.
டெல்லி: ரூபாய் ஒழிப்பு விவகாரத்தால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ள நிலையில் பணம் எடுக்கும் உச்சவரம்பை ரூ. 500 அதிகமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரியவில்லை.
மத்திய அரசு ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்களை ஒழித்து விட்டது. அதன் பிறகுதான் பல பிரச்சினைகள். கை நிறையப் பணம் இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்த முயாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏடிஎம்களில் தினசரி ரூ. 2000 மட்டுமே மற்றும் வங்கிகளுக்கு நேரில் சென்று ரூ. 4000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
மெஷின்கள் இயங்கவில்லை
வங்கிகளில் கால் கடுக்க பெரும் கூட்டம் தினசரி நிற்கிறது. ஏடிஎம்.களில் போடப்பட்ட பணம் சீக்கிரமே தீர்ந்து விடுவதால் பல மெஷின்கள் இயங்கவில்லை.
அத்தியாவசிய பணிகள் பாதிப்பு
இதனால் தினசரி காய்கறி வாங்குவது, பால் வாங்குவது உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளுக்குப் போதிய பணம் இல்லாமல் மக்கள் பெரும் கஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
500 ரூபாய் இன்க்ரிமென்ட்!
இந்த நிலையில்தான் தற்போது ஏடிஎம் மூலமாக எடுக்கும் பணத்தின் அளவை ரூ. 2500 ஆகவும், வங்கிகளுக்கு நேரில் போய் எடுப்பதை ரூ. 4500 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளது. அதாவது ரூ. 500 இன்க்ரிமென்ட் கொடுத்துள்ளது அரசு.
மக்களுக்கு திருப்தி இல்லை
இருப்பினும் இந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெருத்த ஆதரவு கிடைத்தது போல தெரியவில்லை. பலரும் இதை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
கை நிறைய பணம் இருந்தாலும்
கை நிறையப் பணம் இருந்தாலும் கூட அதை நாம் எடுக்க முடியாது. காரணம், மோடி நமக்குக் கொடுத்திருக்கும் இன்க்ரிமென்ட் வெறும் 500 ரூபாய்தான் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர் சமூக வலைதளங்களில்.