ஜல்லிக்கட்டு வழக்கு: ஜூலை 26ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைப்பு.. 2 அவமதிப்பு வழக்குகள் தள்ளுபடி
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கை 6 வார காலத்திற்கு ஒத்திவைக்கக் கோரி வாய்தா கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்ததை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
மேலும் தமிழக அரசு மீது சவுமியா ரெட்டி உள்ளிட்ட 2 விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி பதவியில் அமர்ந்த பிறகுதான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நலவாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த கோர்ட் கடந்த 2014ம் ஆண்டு மே 7ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், ஜல்லிக்கட்டு பேரவை, வீர விளையாட்டு கழகம் உள்பட பல்வேறு அமைப்பினரும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தீவிர முயற்சி எடுத்தனர்.
மத்திய அரசு அறிவிக்கை
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வந்ததால், அதை மனதில் கொண்டு மத்திய அரசும் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதிப்பதாக அறிவிக்கையை வெளியிட்டது. அனைவரும் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கக் கோரி வந்த நிலையில் மத்திய அரசு சாதாரண அறிவிக்கையை வெளியிட்டது.
இடைக்காலத் தடை
இதையடுத்து அறிவிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் தரப்பிலும், 9 தனிநபர்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு இடைக்கால தடைவிதித்தது.
4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு
மேலும் மத்திய அரசு, தமிழக அரசு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட தொடர்புடைய மாநில அரசுகள் 4 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திடீர் வாய்தா
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசுத் தரப்பில் ஒரு அவசரக் கடிதம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கை 6 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஜூலை 26க்கு ஒத்திவைப்பு
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கால அவகாசக் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஜூலை 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதாக கூறி சவுமியா ரெட்டி உள்ளிட்ட 2 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்திருந்தனர். அதையும் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டே நடக்காத நிலையில் கோர்ட் அவமதிப்பு எங்கே உள்ளது என்று கேட்டு இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
வீர விளையாட்டு
இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி வீர விளையாட்டு மீட்புக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார்.
தேர்தலில் சமயத்தில் "தர்மசங்கடம்"
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் அதை வைத்து தமிழகப் பிரசாரக் களத்தில் பிரசாரம் நடைபெறும் என்று மத்திய பாஜக அரசு அஞ்சியதால்தான் வாய்தா கேட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.