அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே ஆகனும்.... மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வி.ஹெச்.பி.!!
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளையும் தகர்க்க வேண்டும் என்று மத்திய அரசை இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி செய்தியாளர்களிடம் வி.ஹெச்.பி. மூத்த தலைவர் அசோக் சிங்கால் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் உரிமையை ராமஜென்மபூமி நியாஸுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை இந்த ஆண்டுக்குள் மத்திய அரசுக்குள் தகர்க்க வேண்டும்.
சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதி நிலத்தை பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு கையகப்படுத்தி மசூதி கட்ட வேறு ஒரு இடத்தை ஒதுக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உடனிருந்த பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் கோவில் கட்டுவதற்கு எந்த ஒரு முட்டுக்கட்டையும் இல்லை. மத்திய அரசு உடனே ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.