கையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்
கவுகாத்தி: போடோ அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் இது என, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடா பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (NDFB) நீண்டகாலமாக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தியது. பழங்குடியின போடோ மக்களுக்கு போடோலாந்து தனி மாநிலம் வழங்க வேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கியமான கோரிக்கை.
இந்த அமைப்புடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு இன்று சமாதான உடன்படிக்கை செய்தது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலை வகிக்க, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால், NDFB அமைப்பின் முக்கிய நான்கு தலைவா்கள் மற்றும் அஸ்ஸாம் தலைமை செயலாளர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
போடோ பழங்குடியினருக்கு அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளை வழங்கிட இந்த உடன்படிக்கை வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஸ்ஸாமில் வாழக்கூடிய, போடோ பழங்குடியின மக்களுக்கு, அரசியல் உரிமையும், பொருளாதார சலுகைகளும் கிடைக்கும்.
மாநில பிரிவினை இல்லாமல், அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு போடோ மக்களுக்கு அரசியல், பொருளாதார உரிமைகளை இந்த ஒப்பந்தம் வழங்கும், என்று, அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போடோ அல்லாத பல்வேறு அமைப்புகளால் இன்று 12 மணி நேர அசாம் பந்த்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கோக்ராஜர், பக்ஸா, சிராங் மற்றும் உதல்குரி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் பிற பகுதிகளில், இந்த பந்த்தால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Exclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்
கோக்ராஜர் மாவட்டத்தில் சில பகுதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதைத் தவிர, இதுவரை எந்தவொரு பெரிய வன்முறை சம்பவமும் நடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். கல்லூரிகளில் திட்டமிடப்பட்ட சில தேர்வுகள் நடைபெற்ற போதிலும், பிற அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. நீண்ட தூர பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
அசாமில் போடோ மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இன்று செய்யப்பட்ட ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.